சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டிய திரையரங்கு மேலாளர்..! இளம்பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்..!

சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (21). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் இன்று மதியம் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை எதிரே உள்ள பர்ணபி சாலைக்குச் செல்ல சாலையை கடந்தபோது ஈ.வே.ரா பெரியார் சாலை வழியாக வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் யமுனா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

   

உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த யமுனாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்ட நிலையில் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிற்காமல் வேகமாக அருகில் உள்ள கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாக செல்ல முற்பட்டபோது, பொதுமக்கள் காரை மடக்கி பிடித்தனர். அளவுக்கு அதிகமான மதுபோதையில் காரை ஓட்டி வந்த அப்துல் கவுஹீம் என்பவரை அடித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துல் கவுஹீமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய அப்துல் கவுஹீம் சங்கம் திரையரங்கத்தின் மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.