எங்க அப்பா சடலம் வேணாம் நீங்களே வச்சுக்கோங்க! மருத்துவமனை நிர்வாகத்தை கதிகலங்க வைத்த மகள்!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சடலத்தை தர வேண்டும் என்றால், மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய கட்டணத்தை கட்டி விட்டு எடுத்து செல்லும் படி, மருத்துவமனை நிர்வாகம் கூறியதால், மகள் தந்தையின் சடலத்தை தர வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

   

கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே குன்னம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் ரமசாமி. 69 வயதான இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், இருவரும் மார்த்தாண்டத்தில் இருக்கும் பி பி கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரே அறையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மனைவி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ராமசாமிக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. அவருக்கு தொடர்ந்து 12 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ராமசாமி உயிரிழந்தார்.

இதனால் அவரது உடலை வாங்குவதற்காக உறவினர்கள் வந்த போது, மருத்துவமனை கட்டணமாக தற்போது வரை ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தபட்ட நிலையில் மேலும் 3 லட்சம் ரூபாய் கட்டினால் தான் சடலத்தை தருவோம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமசாமியின் மகள் ஜாஸ்மின் சுபதா, அவ்வளவு பணம் இல்லையென்றும், தந்தையின் சடலத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இது குறித்து ஜாஸ்மின் சுபதா கூறுகையில், தனது தாயாருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சிகிச்சைக் கட்டணம் செலுத்திய நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அதே போல் தந்தை ராமசாமிக்கு சிகிச்சை கட்டணம் மற்றும் மருந்து கட்டணம் என ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தியதாகவும், தற்போது தந்தை உயிரிழந்த நிலையில், சிகிச்சை உள்ளிட்ட செலவுகள் குறித்து தங்களிடம் தரப்பட்ட ரசீதில் தேவையற்ற பல செலவுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

மேலும், ஒரே அறையில் தனது தந்தையையும் தாயையும் தங்கியிருக்க வைத்து சிகிச்சை அளித்து விட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தலா இரண்டாயிரம் ரூபாய் தினசரி அரை வாடகையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மொத்தம் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும் என தங்கள் மீது அதிக கட்டணத்தை திணித்ததால், அந்த தொகையை செலுத்த முடியாது எனவும், அதுவரை தனது சடலத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் மருத்துவமனை நிர்வாகம், அவரின் சடலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது. அதுமட்டுமின்றி இது போன்று மருத்துவமனைகள் பல மக்களிடம் இப்படி பணத்தை ஏமாற்றி வாங்குவதால், இது ஒரு சரியான வழி என்று இணையாவாசிகள் கூறி வருகின்றனர்.