‘எனக்கு யாரும் இல்லை’ நாடகமாடி 3 பேரை திருமணம் செய்த பெண்! அதன் பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திராவில் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து, மூன்றாவதாக ஒரு இளைஞரை திருமணம் செய்து 6 லட்சம் ரூபாய் பணம் பறித்து தலை மறைவான பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்திய மாநிலம் ஆந்திராவில், சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்தவர் சுனில் குமார் (29). இவருக்கு திருப்பதி ஏ.டி.பி. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறி சுகாசினி என்பவர் அறிமுகமானர்.

   

சுனில்குமாருடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்ட சுகாசினி அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். மேலும், தன்னை ஆதரவற்றவர் என்று கூறி, சுனிலை கடந்த டிசம்பர் மாதம் திருமணமும் செய்து கொண்டார்.

திருமணத்தின்போது, சுனில் குமாரின் குடும்பத்தினர் சுகாசினிக்கு 3 சவரனில் தங்க நகைகளை கொடுத்தனர். மேலும், சில மாதங்களுக்கு முன்பு சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி 6 லட்சம் ரூபாய் வரை சுனிலிடம் பணம் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 7-ஆம் திகதி சுனிலிடமிருந்து தங்களுக்கு தெரியாமல் பணம் பெற்றதை அறிந்த அவரது பெற்றோர்கள் சுகாசினியிடம் பணத்தை என்ன செய்தாய் என்று கேட்டுள்ளனர். இதையையடுத்து சுஹாசினி மாயமானதாக கூறப்படுகின்றது.

சுகாசினி எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில், ஆதார் அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் சுகாசினியை தேடிய போது சுனில்குமாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சுகாசினி, நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் செய்து ஒரு மகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

இதற்கிடையில், சுனில் குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட சுகாசினி, தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தை தருவதாகவும், பொலிஸாரை நாடினால் வீணாக பிரச்சினை வரும் என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது.

மேலும், வெங்கடேஷை திருமணம் செய்து கொள்வதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்ததாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் செல்போனிற்கு அனுப்பி அதிர்ச்சியூட்டியுள்ளார் சுகாசினி.

இந்த புகைப்படங்களை பார்த்த சுனில்குமார் உடனடியாக திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை வைத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், சுகாசினி 3 பேரையும் வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றி திருமணம் செய்து நகை பணத்துடன் கம்பி நீட்டியது தெரியவந்தது. முதல் இரு கணவர்களுக்கும் ஆளுக்கொரு பெண் குழந்தைகளை பெற்றுக் கொடுத்து விட்டு தப்பியுள்ளளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதே போல வேறு யாராவது சுகாசினியின் காதல் வலையில் சிக்கி வாழ்க்கை இழந்துள்ளார்களா என்பது குறித்தும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.