மண்ணுக்குள் புதைந்து கிடந்த 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் இருந்தது தெரியுமா?

வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் ஒன்றை இந்திய தொல்லியல் துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்விலே, குறித்த பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

   

அங்கிருக்கும் சாம் கோயில் யுனெஸ்கோவின் உலக புராதானப் பகுதியாக அறிவிக்கப்பட்டதாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த சாம் கோயில் வளாகத்தில நடத்தப்பட்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர்களின் ஆய்வில், 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களின் இந்த சிறந்த கண்டுபிடிப்பால், இந்தியா – வியட்நாம் இடையே இருக்கும் கலாசார உறவு மேம்படும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான நாகரீக தொடர்பு வெளிப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.