அம்மா, அக்கா பேசிய வார்த்தை.. சமையல் கத்தியால் தன்னைத் தானே குத்தி தற்கொலை கட்டிட தொழிலாளி!

திருமங்கலம் அருகே தனக்குத்தானே கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக்பாண்டி (வயது 27). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. விவேக்பாண்டி- சுகன்யாவிற்கு 2 வயதில் கோபிநாத் என்ற ஒரு மகன் உள்ளான்.

   

விவேக்பாண்டி கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. விவேக்பாண்டி நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை பார்த்த அவரது அம்மாவும், அக்காவும் அவரை கடுமையாக கண்டித்தனர். இதனால் மன வேதனை அடைந்த விவேக்பாண்டி சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த வெங்காயம் வெட்டும் கத்தியை எடுத்து தனக்குத்தானே வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

இதில் ரத்தம் வெளியேறிய அவர் படுகாயத்துடன் கீழே சரிந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்த்தனர். அங்கு விவேக்பாண்டி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கூடக்கோவில் போலீசார் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.