
டெல்லியில் ஒரு சிறுவன் இளைஞரை கொன்றுவிட்டு அவரின் உடலின் முன்பு ஆடிய சம்பவம் நடந்திருக்கிறது.
டெல்லியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ஒரு இளைஞரின் சடலம் கிடக்கிறது என்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர்.
அதில், இறந்த நபர் மீது 60 முறை கத்தியால் குத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, பள்ளி படிப்பை இடையில் விட்ட 16 வயதுடைய சிறுவன் தான் கொலை செய்திருக்கிறான்.
சம்பவம் நடந்த சமயத்தில் சிறுவன் போதையில், அந்த இளைஞரிடம் சென்று பிரியாணி சாப்பிட 350 ரூபாய் தருமாறு கேட்டு இருக்கிறார். அந்த நபர் பணம் கொடுக்காததால், சிறுவன் திருட முயற்சித்துள்ளான். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. சிறுவன், இளைஞரின் கழுத்தை நெரித்ததில் அவர் மயங்கி விட்டார்.
அப்போது, இளைஞரை சிறுவன் கொடூரமாக கத்தியால் குத்தியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அதன் பிறகு, இளைஞரின் உடலை பக்கத்தில் இருந்த சந்து பகுதிக்கு இழுத்துச் சென்று, அதன் முன்பு நின்று சிறுவன் ஆடியது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கின்றன. எனவே, சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.