
நடிகர் விஷால் சமீபகாலமாக பெரிய அளவில் ஹிட் படங்கள் கொடுக்காமல் இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடித்திருந்த மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது அந்த வெற்றி அவருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அடுத்ததாக, இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று சென்னையில் பலத்த மழை பெய்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் வெளியேற முடியாமல் கடும் அவதிப்பட்டனர். அதற்காக பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர். தூய்மை பணியாளர்கள் கொட்டும் மழையில் கடுமையாக உழைத்தனர்.
அது தொடர்பாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், எம்எல்ஏக்கள் வெளியே வர வேண்டும். மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார். அவரின் வீடியோவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில், சென்னை மேயர் பிரியா இது குறித்து கூறியிருப்பதாவது, அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றி தரும் என்று பதில் கொடுத்திருக்கிறார்.