கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி: கூடா நட்பால் நேர்ந்த விபரீதம்!!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் நஞ்சப்பநகரை சேர்ந்தவர் சீனிவாசன். கோபி பேருந்து நிலையம் எதிரே சலூன் கடை நடத்தி வந்த இவருக்கு பிரபா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

ஊரடங்கால் கடைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி அவரது மனைவி பிரபா, இரு தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க கூறியுள்ளார்.

   

சீனிவாசனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இரண்டு நாட்களாக சீனிவாசன் இருமல் சளி காய்ச்சலால் அவதிப்பட்டதாக மருத்துவர்களிடம் பிரபா அழுதபடியே கூறியுள்ளார்.

இதற்கிடையே சீனிவாசன் திடீரென இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர் மாரிமுத்து என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். சீனிவாசனின் உடலில் கழுத்து பக்கத்தில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,

சீனிவாசன் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கோபிச்செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்போன் பேச்சால் உண்டான கூடா நட்பால் நிகழ்ந்த விபரீத கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டில் எப்போதும் செல்போனும் கையுமாக சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்த பிரபா ஆண் நண்பர்கள் சிலருடன் பேசி வந்ததாக கூறப்படுகின்றது.

ஊரடங்கில் வீட்டில் இருந்த சீனிவாசன், மனைவி பிரபாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகாத வார்தையால் பேசி கண்டித்ததாக கூறப்படுகின்றது. இதனால் நிம்மதி இழந்த பிரபா, ஆண் நண்பர்களுடன் பேசி பழக இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது கணவர் சீனிவாசனை கொலை செய்ய திட்டமிட்ட பிரபா அதற்காக தனக்கு தெரிந்த குமாரபாளையத்தை சேர்ந்த சலூன் கடை வெள்ளியங்கிரி மற்றும் புரோட்டா மாஸ்டர் சரவணகுமார் ஆகிய இருவரிடமும் யோசனை கேட்டுள்ளார்.

சரவணக்குமாருக்கு ஏற்கனவே பிரபா மீது காதல் இருந்ததால் , கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்யலாம் என்று பழைய சினிமா பாணியிலான ஐடியாவை திட்டம் போட்டு கொடுத்துள்ளான்.

அதே போல சம்பவத்தன்று அதிக தூக்கமாத்திரை கலக்கப்பட்ட பாலை குடித்து விட்டு சீனிவாசன் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது வீட்டுக்குள் வந்த பரோட்டோ மாஸ்டர் சரவணகுமார் மற்றும் வெள்ளியங்கிரி ஆகிய இருவரும் சேர்ந்து சீனிவாசனின் கழுத்தை கயிற்றால் இறுக்கியுள்ளனர்.

அப்போது சீனிவாசன் தூக்கம் தெளிந்து வலியால் கால்களை உதைத்து உயிர்பிழைக்க போராடிய போது அவரது மனைவி பிரபா இரண்டு கால்களையும் இறுக்க பிடித்துக் கொண்டு கணவனை கொலை செய்ய உதவியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கணவனின் கொலையை மறைக்க , அவர் இருமல் காய்ச்சலால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக பிரபா மருத்துவமனையில் நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தேவையில்லாத செல்போன் பேச்சு மற்றும் உபயோகமில்லாத சமூகவலைதள நட்பால் உருவான தவறான தொடர்பால் பிரபா ,வெள்ளியங்கிரி, சரவணகுமார் ஆகிய மூவரும் கொலைகார ஜோடிகளாக கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.